அந்த பாலபருவத்தில், படிப்பு, விளையாட்டு தவிர வேறு பல சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் நாம் நிகழ்த்தி இருக்கோம். நாம் வயதில் சிறியவர்களாகி விட்டதால், இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு ரமணியும் இந்திராணியும் தான் முதல் காரணமாக இருந்தார்கள். முன்மாதிரி எனலாம். நமது வீட்டு மொட்டை மாடியில் ஒரு புராக்கூண்டு இருந்தது.
முதல் காரியமாக, இந்தக் கூட்டாஞ்சோறு பண்ணும் நாட்களில், ஒரு பெரிய தென்ன விளக்குமாற்றை எடுத்துக் கொண்டு, நானும் இந்திராணியும் அந்த இடத்தைப் பெருக்குவோம். ரமணி பெரிய அடுக்கில் (அப்போது பிளாஸ்டிக் வாளி எல்லாம் புழக்கத்தில் இல்லை) தண்ணீர் கொண்டு வருவான். நானும் ராஜாவும் அடுப்பெரிக்க நிறையத் தேங்காய்நாரும், சுள்ளிகளும் கொண்டு வருவோம். அங்கு ஏற்கனவே மூன்று பெரிய செம்பரங்கல் இருக்கும்.
ரமணி மரத்தில் ஏறி புளியம்பூ, கொழுந்து, பிஞ்சு, அரைப்பழம், முழுப்பழம் என்று அத்தனையையும் தொளதொள டிராயர் பாக்கெட்டிலேயே கொண்டு வருவான். ராஜா வீட்டிலிருந்து நமக்கு சாக்கு மூட்டையில் புளியம்பழம் வரும். அம்மா அந்தப்புளியைப் பெரிய பானையிலும் ஜாடியிலும் ஸ்டாக் செய்வார். புளியங்கொட்டையை வெறும் இருப்புச் சட்டியில் வறுத்து, தோலை நீக்கிப் பருப்பை எடுத்து உப்பு நீரில் ஊற வைத்துச் சுண்டல் மாதிரித் தருவார்கள். ருசி மட்டுமில்லை...வாசனையாகவும் இருக்கும். படு டேஸ்டி!
இப்படியாக அந்த நாட்களில் அம்மா ஆக்கி வைத்த உணவோடு மட்டுமல்லாது, அவ்வப்போது இனிப்பு, உப்பு, உறைப்பு, துவர்ப்பு, புளிப்பு, கசப்பு என்ற அறுசுவையும் கலந்து உண்டிருக்கிறோம். உணவு மட்டுமல்ல, நமது வாழ்க்கையும் கூட ருசியானது தான்! இல்லையா?
அன்புடன், பானுரவி
With love, Banooravi