ஒரு பெரிய தாம்பாளத்தில் களிமண் இருக்கு. அப்பா செய்து வைத்த பெரிய மரப்பலகையும், சிறு வாலியில் தண்ணீரும் மட்டுமே...முற்றத்தில் சுகந்தராஜித் தோட்டிக்கு அருகே உடகார்ந்து கொண்டு சுகுணாக்கா என்ன செய்கிறார்? எனக்குள் ஒரு curiosity எட்டிப் பார்க்கிறது....ஆர்வமோடு நானும் அங்கே அமர்ந்து கொள்ளுகிறேன்.
களிமண்ணைக் கற்கள் நீக்கிச் சுத்தம் செய்து கொஞ்சம் கொஞ்சமாக நீர் விட்டு நல்ல பசையை போலப் பிசைந்து கொள்ளுகிறார் அக்கா. ஒரு பெரிய சைஸ் உருண்டை, அடுத்த சைஸ், அப்புறம் சிறு சிறு உருண்டைகள் என நாலைந்து என்று உருட்டி வைக்கிறார். ஒரு தேர்ந்த சிற்பியைப் போல அக்காவின் விரல்களில் அந்தக் களிமண் உருண்டைகள் மெதுவாக உருப் பெறுகின்றன...
அழகிய ஒரு ஆசனம் முதலில் உருவாகிறது. பின்னே வருவது பருத்த வயிறு, அதன் மீது தலை வைக்கப்படுகிறது.... நீண்டு வளைந்த துதிக்கை முகத்திலிருந்து புறப்படுகிறது...திடமான பின்புறமும், முதுகும், நான்கு கைகளும் .... இரு கால்கள் ...அமர்ந்த நிலையில் பிள்ளையார் மெதுவாக உருவாகிறார்....சிறு மிளகு கண்களில் பொருத்தப்பட்டு அவரின் கனிவான பார்வையைக் கூட்டுகிறது...இரண்டு சிறு தீக்குச்சிகள் தந்தமாகின்றன.
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரியதாவர் அல்லவா நம்ப பிள்ளையார்? *ஞாலமாகவும் ஞானமாகவும் இருக்கும் பிள்ளையாரை யாருக்குத் தான் பிடிக்காது?* நாம் போடும் ஒரு சிறு பிள்ளையார் சுழியில் வந்து இருந்து கொண்டு அனைத்திலும் வெற்றியைக் கொணர்ந்து சேர்த்து விடுகிறாரே? இந்தக் கொரோனாவால் நிறையப் பேர் கலந்து கொள்ள இயலாது...அவ்வளவு தானே தவிர அந்த விநாயகப் பெருமான் விருப்புடன் அவதரித்து சகல மங்களங்களையும் எல்லோருக்கும் தருவதற்குத் தயாராக இருக்கிறான் என்பதே பெரிய சந்தோஷத்தைத் தருகிறது.
அன்புடன், பானுரவி
With love, Banooravi