கதை 18

நவராத்திரி

வண்ணப் பூக்களும், வாசனைத் திரவியங்களும், இனிப்புச் சுவையும், கலந்த சாதமும், சுண்டல் வகையும் ....சரசரப் பட்டும், பெண்டிரின் இசையும், சிறுவர் சிறுமியரின் விதவிதத் தோற்றமும், பூஜையும், பாட்டும், ...... என்ன நடக்கிறது? படிகளும் அவை தாங்கி நிற்கும் பொம்மைகளும் செம்மண் பூச்சுடன் மிளிரும் கோலமும், ஒளிரும் விளக்குகளும்.....என்ன நடக்கிறது? மனதுக்குள் உற்சாகம் நிரம்பி வழிகிறது....

ஆம்....இன்று நவராத்திரி ...சுபராத்திரி! கண் முன்னே நமது அம்மாவும் அப்பாவும் சகோதரிகளும் நிறைந்த அந்தப் பண்டிகை நாட்கள் தெரிகின்றன. பரண் மீதிருந்து பெரிய பெரிய பெட்டிகள் இறக்கப்படுகின்றன.....ஒற்றை வரிசையில் மரப்படிகளை அப்பா கட்டமைத்துத் தருகிறார். அப்பாவின் பளிச் வேட்டிகள் அவற்றின் மீது அழகாகப் படியும்படி சகோதரிகள் கச்சிதமாக வேலை செய்கிறார்கள்.

நாகரிகைப் பூக்களும், வண்ணக் காகிதத் தோரணங்களும், மணி மாலைகளும் இணைக்கப்பட்டு படிக்கட்டு அழகாக உருவாகிறது. சரசரவென்று ஒவ்வொரு பொம்மையும் பிரிக்கப்படுகிறது....அம்மாவின் பழைய புடவைக்குள் இருந்து மாம்பழக் கண்ணன் எட்டிப் பார்க்கிறான். மொழுமொழுவென்ற அந்தக் கண்ணன் தான் எத்தனை அழகு! ஓ! அது என்ன? கிருஷ்ணரும் ராதையும் ஊஞ்சல் ஆடும் நளினமான பொம்மை....இந்தப்புறம் கோபிகா ஸ்திரீகளுடன் ஜலக்ரீடை செய்யும் கிருஷ்ணன், உரலில் கட்டி மிரட்டும் யசோதையும் குறும்புக்கார கிருஷ்ணரும்....மகிஷனைக் கொன்ற தோற்றத்தில் துர்க்கை, நளினமான மீனாக்கிசியும்....

அம்மா சொல்லுவார்...*"பொம்மைகள் பெட்டிக்குள் குதித்துக் கொண்டே இருக்குமாம்...எப்போது நம்மைக் கொண்டாடுவார்கள் என்று...அதனால் கொலு வைப்பவர்கள் ரொம்ப இல்லாட்டாலும் சாஸ்திரத்துக்காவது ரண்டு பொம்மை வைக்கணும்"*... ஆம்...அம்மாவின் குரல் கேட்கிறது....இன்று வரை அது போல் கடவுள் அருளால் நவராத்திரி நல்லவிதமாக நடக்கிறது. மதுரை மீனாட்சியும், காமாட்சியும், அன்னபூரணியும், விசாலாட்சியும், துர்காபரமேச்வரியும், காளிகாம்பாளும், சமயபுரத்தாளும்.... எல்லாம் வல்ல அந்த இறைவனைத் துதிப்போம்! *வணங்குவோம்! நம்புவோம்! அவனருளாலே அவன் தாள் வணங்குவோம்!*

அன்புடன், பானுரவி

With love, Banooravi