புத்தகங்கள் கற்றுத் தந்தவை, நம்மைச் சுற்றியுள்ள நிஜ உலகம் கற்றுத் தந்ததை விடவும் அதிகமானது என்றே எனக்குத் தோன்றுகிறது. ஒவ்வொரு கதையும், அல்லது புத்தகமும் ஒரு விருட்சத்தைப் போன்றது... ஏனெனில் அதனுடைய வேர்களை எங்கென்று யாராலும் கண்டறிய முடியாது. கல்வெட்டுக்கள் சரித்திரத்தை வெளிப்படுத்துவது போல், வாழ்க்கையின் சாரத்தை, இந்தப் புத்தகங்கள் வரிவரியாக நமது மனதில் பதித்து விடுவது நிஜம் தானே?
படிக்கும் பழக்கம் எப்போது ஆரம்பித்தது என்று சரியாகத் தெரியவில்லை....அந்த நாட்களில் வீட்டில் அப்பா நிறையப் புத்தகம் சேகரித்து வைத்திருந்தார். சிகப்புத் துணி அட்டையில் நிறைய இலக்கியப் புத்தகங்களும், ஜோதிடப் புத்தகங்களும், நிகண்டுவும், திருவிளையாடல் புராணமும், பெரிய புராணமும்...தூக்க முடியாதபடி கனமாக இருந்தாலும், நான் நிறையத் தடவை படித்தது அந்தப் பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதை தான். அந்த ஓவியங்களே மிகவும் வித்தியாசமாக இருக்கும். பழுப்பேறிய காகித மணம் இப்போதும் நெடி அடிக்கிறது.
அம்மாவுக்குக் கல்கியின் சரித்திரக்கதைகளில் ரொம்பவே விருப்பம். சிவகாமியின் சபதமும், பொன்னியின் செல்வனும் அப்போதே ஏக டிமாண்டில் இருந்த வாராந்திரக் கதைகள்! விஜியாக்கா பற்றிச் சொல்லவே வேண்டாம். சாண்டில்யனின் யவனராணியை விழுந்தடித்துக் கொண்டு படிப்பாள். கடல்புறாவை உடனுக்குடன் படிக்கவில்லை என்றால் தூக்கமே வராது.
இப்போது.....கணினியும், செல்போனும் எத்தனையோ விஷயங்களை அள்ளித் தருகிறதுதான்...ஆனாலும் புத்தகத்துக்கே உரிய ரம்யமான வாசனையோடு எந்தச் சூழலும் பாதிக்காமல், நம்மை மறந்து ஆழ்ந்து போய்ப் படித்த காலங்கள் இவற்றுக்கு இணையாகாது. பாரதியின் ஈரமான கவிதைகள் நெஞ்சுக்குள் மாமழையாக அல்லவா பொழிகிறது! கதைகளும், கவிதைகளும் மொழிக்குச் சிறகு முளைத்தது போல் அல்லவா இருக்கிறது?
அன்புடன், பானுரவி
With love, Banooravi