கதை 14

கல்யாணம்

அந்தப் பெண் துறுதுறுவென்று சரசரப்போடு அங்கும் இங்கும் சம்சாரமாகச் சுற்றிக்கொண்டு அனைவரும் கவனிக்கும்படியாக இருந்தாள். கல்யாண வீடு என்பதால் இயல்பாகவே கூட்டமும் சந்தடியுமாக இருந்தது...ஆனாலும், எளிமையாகவும், அழகாகவும், புன்முறுவலுடனும் வளைய வந்த அந்தச் சிறுமிக்குச் சுமாராக பன்னிரண்டு வயது இருக்கலாம்...வரிசையான பற்கள், நெளிநெளியான கூந்தல், நல்ல உயரம், உலகை முழம் போட்டு அளக்கும் விதமாகப் பெரிய கண்கள்......

அந்தப் பெண்மணிக்கு அந்தச் சின்னஞ்சிறு பெண்ணை நிரம்பவே பிடித்து விட்டது. கூர்ந்து கவனிக்கலானாள். அந்தப் பெண்ணின் குடும்பம், எந்த ஊரைச் சேர்ந்த பெண், என்பதெல்லாம் தெரிந்து கொண்டாள். விசாரித்த வரையில் மிகவும் திருப்தி ஏற்பட மனதுக்குள் பெருத்த நிம்மதி ஏற்பட்டது! பொருத்தமான பெண்ணாகத்தான் இருப்பாள் என்ற ரீதியில் மனதுக்குள் ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தாள்.

அந்தப் பிள்ளையின் முதல் மனைவி மைசூரி கண்டு பெரியவள் ஆகும் முன்பே கடவுளிடம் சென்றுவிட்ட படியால், அந்தப்பிள்ளைக்கு நல்ல பெண்ணாகத் திருமணம் செய்ய வேண்டுமென்று அந்தத் தாய் எண்ணியதில் நியாயம் இருந்தது! காரைக்குடியில் கழனிவாசல் என்ற ஊரில், மிகவும் வசதியாக, ஒரு ஜவுளிக் கடையின் சொந்தக்காரர்கள்...

சாரதாம்பாள் என்ற அந்த இரும்பு மனுஷி அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எத்தனை உற்ற துணையாக இருந்தார் என்பதே அந்த வீட்டின் ஊற்றுச்சுனை. *கதைகளை விட வாழ்க்கை புதிரானது அல்லவா? மனது இல்லாத மனிதன் மட்டும் இல்லவே இல்லை!* அம்மாவுக்குள்ளும் எத்தனையோ ஆசாபாசங்கள் இருந்திருக்கும்...சிறு சிறு இடைவேளையில் வரிசையாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு, புகுந்த வீட்டின் பெரியவர்களை அனுசரித்துக் கொண்டு, எப்போதும் சிரிப்பு என்ற கவசத்தை மாட்டிக் கொண்டு, தனது தாபங்களை வெளியே சொல்ல முடியாமல் தவித்திருக்கலாம்.

அன்புடன், பானுரவி

With love, Banooravi