கதை 8

வீட்டு நடப்பு

பெரிய குடும்பமாக இருந்தபடியால், மாதம் ஒருமுறை, சமயங்களில் வரக்கூடிய பண்டிகை அல்லது விசேஷங்களைப் பொறுத்து, இருமுறை என்று வீட்டில் மாதாந்திரச் சாமான்கள் வாங்கி வைப்பார்கள். நமது வீட்டிலிருந்து சுமாராக ஒரு பதினைந்து நிமிஷம் நடந்தால் வருவது பழனியப்பா ஸ்டோர்ஸ். அந்தக் கடையின் முதலாளி அத்தனை சிகப்பாக, கம்பீரமாகப் பளபளவென்று இருப்பார். நம் வீட்டார் மீது அலாதி மரியாதை கொண்டவர்.

மூன்று விதமான எண்ணெய் வாங்கும் தூக்குப் பாத்திரம் இன்னமும் நினைவில் இருக்கு. ஒரு பச்சை கலர் கரண்டியுடன் ஒடுக்கமான கடலை எண்ணெய்த் தூக்கும், உருண்டையாகப் பதங்கிக்காய் மாதிரியான அலுமினியத் தூக்கு நல்லெண்ணெய்க்கும், குறுகிய கழுத்துடன் இருந்த தேங்காய் எண்ணெய்த் தூக்கும் நினைவிருக்கு. அந்தக் குடுவையில் எண்ணெய் அளந்து போடுவது பார்க்க படு சுவாரஸ்யமாக இருக்கும்.

வாரந்தோறும் பிரதி ஞாயிறு சந்தை. அப்பாவோடு சந்தைக்குப் போவது படு ஜாலியாக இருக்கும். அப்பா சைக்கிள் எடுத்து வருவார். முருங்கை, கத்தரி, சிகப்பு முள்ளங்கி, காரட், பீட்ரூட், வெண்டை, அவரை, புடலை என்று அப்பா வாங்கித் தள்ளி விடுவார். வைத்தியருக்குக் கொடுப்பதை வாணிகனுக்குக் கொடுப்பதால், உடம்பு ஆரோக்கியமாக இருக்கும் என்பதில் அப்படி ஒரு அலாதி நம்பிக்கை...

அம்மாவின் சமையல் அத்தனை ருசியாக இருக்கும். வத்தல் குழம்பு, பொரிச்ச குழம்பு, மெந்தியக் குழம்பு, மாங்காய்க் குழம்பு, அப்பளாக் குழம்பு, பச்ச மோர்க்குழம்பு, புளியிட்ட கீரை, வாழைக்காய் பொரியல்...அப்படி ஒரு நாளி ரசம்... எந்த ஹோட்டலிலும் இந்த ருசி கிடைக்காது!

அன்புடன், பானுரவி

With love, Banooravi