மன்னிப்புஅன்புசொல்லாத சொல்
கதை 16

சொல்லாத சொல்

பேச்சு!! பேச்சு!! பூங்காவில், ரயில் நிலையத்தில், சாலை ஓரத்தில், வீட்டுத் திண்ணைகளில் (திண்ணைகள் இப்போது கிடையாது...) கடற்கரையில் என்று எல்லா இடங்களிலும் மனிதர்கள், முக்கியமாக முதியவர்கள் தம்மை மறந்து பேசுவதைக் கவனித்திருக்கிறேன்...பேசிக் கொள்வதற்காகவே, இது போல் இவர்கள் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டு வருகிறார்களோ என்று தோன்றும்!

......

சில சமயங்களில் தன்னோடு யாருமற்ற சமயங்களில் கூட தனக்குத்தானே ரொம்பவும் சீரியஸாகப் பேசிக் கொண்டிருக்கும் வயதானவர்களைக் காணும் போது, மனதுக்குள் திக்கென்று ஒரு அதிர்வு ஏற்பட்டு கண்ணில் ஈரம் கசிகிறது....இந்தப் பேச்சின் மீது எதனால் எல்லோருக்கும் இத்தனை பிடிப்பு ஏற்படுகிறது? பேச்சைப் போல மிகுந்த ருசி உடையது என்று எதுவும் இல்லாமல் போய் விட்டதா, என்ன?

still speaking...

அவர்களின் ஒரே மகனும் (எனது தோழியின் சகோதரன்) வேற்றினப் பெண்ணைச் சொல்லாமல் கொள்ளாமல் திருமணம் செய்து கொண்ட போது அவரது கோபம் தலைக்கேறித் தனது மனைவியுடன் சுத்தமாகப் பேசுவதையே நிறுத்தி விட்டார்......பாவம்...மேற்படி நிகழ்வுகளுக்கு, அவரது மனைவி எப்படி காரணமாக அல்லது பொறுப்பாக முடியும்? பேசாமல் தவிர்க்கும் படியாக, அப்படி அவர் செய்த தப்பு தான் என்ன? நாளடைவில் அந்த அம்மா தனக்கு வந்த புற்று நோயைக் கூடச் சொல்லாமல், தவித்துப் போய் ஒரு நாள் திடுமென்று ஆதரவின்றி, யாருடைய கவனிப்பும் இல்லாமல் இறந்த போது, ஸ்தம்பித்துப் போனதாம் குடும்பம்!

silence under stone

மகாபாரதத்தில் விதுரன் மிகவும் வயதாகிப் போய் துறவறம் மேற் கொள்ளுகிறான். பேச்சைத் துறந்து மலையடிவாரத்தில் மௌனியாகத் திரிகிறான். தன்னையும் அறியாமல் நாவு அசைந்து, பேச்சு வந்துவிடக்கூடும் என்று எண்ணி, நாவிற்கு அடியில் கூழாங் கற்களை அடக்கிக் கொண்டு இருந்தானாம்.... ஆனால் பிறந்தது முதல், பேசத்துக்காகப் பாடுபட்டு நித்திய பிரம்மச்சாரியாக மௌனமாகத் தனிமையில் வாழ்ந்த பீஷ்மரோ, யுத்தத்தில் காயம்பட்டு அம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கும் போதும், எதையெதையோ நினைத்துப் பேசிக் கொண்டே இருக்கிறாராம்! *சொல்லாத சொல்தான், எல்லா உறவுகளையும் அறுத்து விடுகிறது.*

அன்புடன், பானுரவி

With love, Banooravi