வீதியில் நம்மாத்து வாசல் பெரியதாக இருக்கும். தினந்தோறும் அந்தத் தெருவில் இருந்த அத்தனை சிறுவர், சிறுமியரும் அங்குதான் விளையாடுவோம். கோலி, கிட்டுப்புள், கபடி, நொண்டி, கண்ணாமூச்சி, இப்படிப் பலவிதமான விளையாட்டுக்கள். குளம் கலை என்பதொரு விளையாட்டு. ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்தது..பெரண்டு குடம்..மூணு குடம் என்று விளையாடுபவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து கூடிக் கொண்டே போகும் விளையாட்டு.
எல்லோரும் வரிசையாகக் கால் நீட்டி உட்கார்ந்து கொண்டு அட்டலங்கா பொட்டலங்கா, அடுப்பெரிச்ச மாதுளங்கா, உதியிலே பருப்புத் துவையல் வச்சிருந்தேன், எந்தப் பூனை தின்னுது? இந்தப் பூனை..... என்று ஒருத்தனைப் பிடித்துத் தள்ளுவது ஒரு விளையாட்டு. "சங்கிலி புங்கிலி கதவைத் திற! நான் மாட்டேன் வேங்கைப்புலி.... ஆட்டுக்குட்டியைக் கண்டீங்களா? கண்டோம்! எங்க? வீட்டுக்குள்ள...வளலாமா? வளக்கூடாது" இப்படிச் சொல்லிக்கொண்டு ஆடுபுலி ஆட்டம் ஒன்று இருக்கும்.
அக்கம் பக்கத்து வீட்டு பெண்டிர்கள் இளமாலைப் பொழுதில் நம்மாத்துப் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு அன்றைய வீட்டில் சமைத்த பண்டங்கள் பற்றியும், மற்றைய நாட்டு நடப்புக்களையும் பேசிக் கொண்டிருப்பார்கள். பூக்காரி வந்து போவதும், குச்சி ஐஸ், சேமியா ஐஸ், பஞ்சு மிட்டாய் விற்பவர்களும், புழுதி வாரிக்கொண்டு அண்ணாமலைப் பாலிடெக்னிக் இளவட்டங்களும், பெருமாள் ஐயா கடைக்கு வந்து போகும் ஜனங்களுமாக அந்த அரு.வீதி களை கட்டிக் கொண்டிருக்கும்.
வீட்டில் இனிய பாட்டின் முழக்கம்! இப்புறம் சுலோகம்! அப்புறம் கீதம்! எதிரே கோவிலில் மேளத்துச் சப்தம்! வீதியெங்கும் திருவிழாக் கோலம்! நாடகர் பண்டிதர் நாவலர் பாவலர்.... பாகவதர்கள் ஜனைப் பாடல்கள்! மல்கிய சூழலில் மகிழ்ச்சியாய் வளர்ந்தோம்! கேட்டுக் கேட்டுப் பாட்டுக் கற்றோம்! கலைகள் பலவும் கைவரப் பெற்றோம்!
அன்புடன், பானுரவி
With love, Banooravi