கடிதங்கள் அலாதியானவை. தபால்காரரின் கிணுங் என்ற மணியோசைக்காகக் காத்துக் கிடந்த நாட்களை எப்படி மறக்க முடியும்? வாசலில் கிணுங் கிணுங் என்ற சைக்கிள் சத்தம் கேட்டாலே அது தபால்காரரின் வரவைச் சொல்லிவிடும். வீட்டில் இருந்த அத்தனை முகங்களிலும் பூப்பூக்கும்...
வந்த கடிதங்கள் அனைத்திலும் Received on/ Replied on என்று அப்பா சிகப்பு இங்கில் எழுதி ஒரு கம்பியில் குத்தி சுவற்றில் மாட்டி வைத்து விடுவார். எனது பள்ளித் தோழி விசாலாட்சி எழுதிய கடிதம் இன்னமும் நினைவில் இருக்கு. "அரபிக் கடலைப் போன்ற அன்பும், பசிபிக் கடலைப் போன்ற பண்பும், இந்துமஹாசமுத்திரத்தைப் போன்ற இனிமையும் கொண்ட பானுவுக்கு" என்று அந்தக் கடிதம் தொடங்கியதைப் படித்து வீட்டில் உள்ள அனைவரும் முற்றத்தில் உரக்கச் சிரித்தது நினைவில் நிழலாடுகிறது.
உறவினர்களுக்கு பதில் எழுதி, போஸ்டாபீஸ் போய் ஸ்டாம்ப் ஒட்டி போஸ்ட் பண்ணும் வேலையை எனக்குத் தருவார்கள். சிதம்பர விநாயகர் கோயிலுக்கு அருகே, ராஜா வீட்டு அரண்மனைப்பக்கம் அந்தச் சின்ன போஸ்ட் ஆபீஸ் இருக்கிறது...அந்தச் சிகப்பு வண்ணத் தபால் பெட்டிக்கு வாய் இருந்தால் கடிதங்களைப் பற்றிய ஆயிரம் கதை சொல்லும்!
கொஞ்ச நாட்களுக்கு முன், நம் அம்மா எழுதிய கடிதத்தை ராஜா அனுப்பியபோது, அம்மாவையே நேரில் பார்த்தது போல் உணர்ச்சிப் பெருக்கில் நான் சற்று நேரம் உறைந்து போனது நிஜம்! பாவம் சரியான கண்ணாடி கூட இல்லாமல் எழுதுவதாக அம்மா எழுதியது நெஞ்சில் ரணமாக இன்னமும் வலிக்கிறது....இப்போது ஈமெயில் வந்து விட்டது...ஆனாலும் எத்தனை பேர் விஸ்தாரமாக விஷயங்களைப் பரிமாறிக் கொள்ளுகிறோம்?
அன்புடன், பானுரவி
With love, Banooravi