கதை 2

பூக்கள்

வாசனையும் வண்ணமும் வனப்பும் கொண்ட பூக்கள் இயற்கை நமக்கு அளித்த கொடை என்பேன். பிறப்பு, திருமணம், திருவிழா, பூசைகள், என்று நம்மோடு எப்போதும் கூடவே வருவது இந்தப் பூக்கள்.

காலையில் எழுந்தவுடன் நாங்கள் செய்யும் முதல் வேலை பூப்பறிக்கப் போவதுதான். அப்பா வேலை பார்த்துவந்த ராஜாவீட்டுத் தோட்டத்துக்கு நானும், ரமணி, ராஜாவும் போவோம். ஒரு பச்சை நிற பிளாஸ்டிக் கூடை நிறையப் பூக்களோடு வருவோம். அந்த விடியற்காலை வேளை சற்றே இருட்டைப் பூசிக்கொண்டு படு நிசப்தமாக இருக்கும்.

அரளி, செம்பருத்தி, முக்கியமாக நாகலிங்கப்பூ... பெரிய பெரிய ட்ரோபால் சைசில், விழுதுகளில் பழுப்பு நிறத்தில் காய்த்துக் கிடக்கும் பூதாகாரமான மரங்களில் இந்த நாகலிங்கப்பூக்கள் குலுங்கிக் கொண்டிருக்கும். ஒரு குட்டி லிங்கத்துக்குக் குடை பிடித்துக் கொண்டு ஆயிரம் நாவு படைத்த ஆதிசேஷன் இருப்பது போல் அமைப்பு...

தோட்டம் கொண்ட வீடு அமைந்த போது மனசு ரொம்பவே குதூகலித்தது. ரோஜா, மல்லி, செவ்வரளி, செம்பருத்தி, பிச்சிப்பூ என்று தோட்டம் நிறைய மலர்கள் ஒன்று மாற்றி ஒன்று பூத்துக் குலுங்கும்போது மனதுக்குள் சந்தோஷம் பூக்கிறது. வாழ்க்கை என்பது எல்லோருக்கும் பூவைப் போல...மணமானது...மேலும் அழகானது கூட... இல்லையா?

அன்புடன், பானுரவி

With love, Banooravi